மதி மயங்கிய இனிய மாலைப் பொழுதில்
மதி தெளிய பாகவதம் கேட்டமர்ந்தனனே
மனுமகன் வழிதுளிர்த்த சிறு துருவன்
மழலை மொழியுமிழ நடை பழகித் தவழ
மனமகிழ ஓடி வந்து தாவித் தந்தை
மடியமர முயன்று தோற்ற விசும்பல்
மணிவண்ணா நின்செவி விழுகிலையோ !
மண்ணும் விண்ணும் அளந்த பாலா நீ
எண்கிலையோ நின்போல் சிறுபிள்ளையென !
என்மகன் மடியமர்த்தி முத்தமிட்டு அவன்
மென்தாள் வருடித் துருவன் நினைந்துருகி
என்விழி வழித்திவலை திரள, தண்மழை
என்றெண்ணித் தவளை கத்தித்தே – பண்டு
தன்மகன் பிழைத்த தந்தை ஒறுக்க
தூண் பிளந்து வெகுண்டெழுந்த சிங்கன்,
தேம்பிய துருவனை மறந்தது பிழையென
நவில்கிலையோ நின்புகல் நப்பின்னையும் !
களிறொன்று பிளிற செங்கழுகு தோளேறி
ஒளிவென்றோடி முதலை கொன்ற முகுந்தா
பிள்ளை கண்டும்நின் னுள்ளம் நெகிழாது
பள்ளி கொள்ள இயன்றிற்றோ இயம்பின் !
ஒருக்கால் அவன்தவம் தழுவி நெஞ்சுருகி
திருக்கண் வளர்ந்து, கருணைப் புனலது
திரண்டுருண்டு விளைந்த விண்கடல்,
அரங்கா நீயயரும் வெண்பாற்கடலோ ?
Hints:
மனுமகன்– ஸ்வாயம்பு மனுவின் மகன் உத்தானபாதன் – துருவனின் தந்தை
அளந்த பாலா – வாமன அவதாரத்தில் பிள்ளையாய் வந்த பெருமாள்
சிங்கன் – பிரகலாதன் காக்க தூண் பிளந்து வந்த நரசிங்க பெருமாள்
களிறு- கஜேந்திரன் யானை
செங்கழுகு – கருடாழ்வார்
ஒளிவென்றோடி – ஒளியின் வேகத்தை வென்று ஓடி வந்து காத்தான்